நடிகர் அஜீத் குமார் தனது பிறந்த நாளை கொண்டாடவேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை தமிழர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ள நிலையில் தனது பிறந்தநாள் விழா கொண்டாட வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமீபத்தில் தொடங்கப்பட்ட 'அசல்' திரைப்பட தொடக்க விழாவில் நேரில் கலந்து கொண்டும், தொலைபேசி மூலமாகவும், தலைமை இயக்கத்தின் மூலமாகவும் வாழ்த்து சொன்ன ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி.

வரும் மே 1-ந் தேதி எனது பிறந்தநாள் வருவதையொட்டி எனது ரசிகர்கள் அனைவரும் அந் நாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருவதாக ஒரு செய்தி என் கவனத்திற்கு வந்தது. உங்கள் அன்புக்கு நன்றி.

நான் உங்கள் உற்சாகத்திற்கு தடை போடுவதாக எண்ண வேண்டாம். இலங்கையில் நம் சக தமிழர்கள் இன்னல்களுக்கும், இடர்ப்பாடுகளுக்கும் இடையே சிக்கித் தவிக்கின்ற இந்த நேரத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடுவது மனித நேயத்திற்கு முரண்பாடானது என்று கருதுகிறேன்.

மேலும் பொதுத் தேர்தல் நடந்து கொண்டிருக்கிற இந்நேரத்தில் நம்மால் எந்தவிதமான இடையூறும் இருந்து விடக் கூடாது என கருதுகிறேன்.

மேலும் இம்மாத இறுதியில் நான் படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல இருப்பதால் ரசிகர்கள் நேரில் வந்து வாழ்த்து சொல்வதை தவிர்த்து நம் நற்பணி இயக்கத்தின் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு தலைமைக்கு ஒத்துழைப்பு அளிக்க கோருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments (0)